பக்கம் எண் :

பாடுங்குயில் (பாடல்கள்)131

8
ஏங்குதல் நீதியோ?

தாயுன தின்னருள் பாடவைத்தாய்-துன்பந்
    தாக்கிட ஏனுளம் வாடவைத்தாய்?
ஆயும் புலமையை நாடவைத்தாய்-அம்மா
    அப்புறம் ஏன்பொருள் தேடவைத்தாய்?

கைப்பொருள் என்னிடம் தங்கவிட்டால்-நெஞ்சிற்
    காயங்கள் யாவையும் மங்கிவிட்டால்
மெய்ப்பொரு ளின்மணம் பொங்கவிட்டே பார்ப்பேன்
    மேனியில் பாமலர்த் தொங்கலிட்டே

விண்ணுல கொன்றனை நான்படைப்பேன்-அங்கே
    விந்தைகள் ஆயிரம் மேலமைப்பேன்
மண்ணுல குய்ந்திடத் தேன்கொடுப்பேன்-இந்த
    மைந்தனைத் துன்புற ஏன்விடுத்தாய்?

மாமயில் போலொரு மங்கையினாள்-நல்ல
    மாலைச் சுடர்நிகர் செங்கையினாள்
காமுறு வேளையின் அங்கவளை-ஏனோ
    கட்டுற வைத்தனை சங்கிலியால்?

கற்பனை வான்மிசை நான்பறப்பேன்- அங்கே
    காதல் மகள் தரும் தேன்சுவைப்பேன்
பொற்புடை யாளவள் தானழைத்தாள்-வானில்
    போய்வரு மென்சிற கேனறுத்தாய்?