பக்கம் எண் :

134கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

10
கடவுள் எழுதிய கவிதை

கவிதை வரைந்தவன் பாடிவந்தான்-அவன்
கடவுள் எனும்பெயர் சூடிவந்தான்
புவியில் நிகரெனக் கில்லையென்றான்-இது
புதுமைப் படைப்பெனச் சொல்லிநின்றான்

படிப்பறி யார்தமைக் காட்டிநின்றே-என்றன்
படைப்பினுள் ஒன்றிது காண்க என்றான்
எடுத்தறி வோடதைப் பார்த்தபின்னர்-அட
எழுத்துப் பிழையிது வென்றுசொன்னேன்

பொய்ம்மை வனைந்திடும் புல்லர்நின்றார்-தமைப்
புனைகவி யாமெனச் சொல்லிநின்றான்
செம்மை கெடுங்கவி செய்துவிட்டாய்-இது
சீர்கெட்ட பாட்டெனச் செப்பிவிட்டேன்

வாழ்வு பெரிதென மானம்விட்டார்-தமை
வாழுங் கவியெனக் காட்டிவிட்டான்
தாழ்வு படக்கவி ஆக்கிவிட்டாய்-இது
தளைகெட்ட பாட்டென நீக்கிவிட்டேன்

இமைப்பொழு தாகினும் இன்பமிலார்-பெறும்
இரந்துணும் வாழ்வினைப் பாடலென்றான்
அமைப்பினைப் பாழ்படப் பாடிவிட்டாய்-ஈது
அடிகெட்ட பாட்டென மூடிவிட்டேன்

வறுமை யுடன்வளங் காட்டிவந்தே-அவை
வளர்விதிப் பாட்டென நீட்டிவந்தான்
சிறுமை படக்கவி காடடவந்தாய்-தொடை
சேர்கிலாப் பாட்டெனப் போட்டுநொந்தேன்