பக்கம் எண் :

பாடுங்குயில் (பாடல்கள்)143

16
தெரு விளக்கு

மிகத்துணி வுடனே நடுத்தெரு வோரம்
    லிரவிய இருளில் நிலைபெறும் ஓர் தொழிலேன்
அகப்பொருட் கள்ளர் புறப்பொருட் கள்ளர்
    அவரவர் செல்வார் அறிந்தும் வாய்மொழியேன்

பனியிலும் மழையிலும் நனைவதும் உண்டு
    பகல்தரும் வெயிலில் காய்வதுந் தினமுண்டு
தினையள வெனினும் தனிநலம் இன்றிச்
    செய்திடும் பொதுநலஞ் சேரும் மனமுண்டு

புகுமிருள் கண்டால் எனைவர வேற்றுப்
    புவியோர் தொழுவார் புகழ்வார் கைகுவித்தே
பகல்வரும் அதன்பின் எனைமதி யார் இப்
    பாரினர் செயலை நகைப்பேன் வாய்குவித்தே

ஊரார் அனைவரும் விழிதிற வாமல்
    உறங்கிடு வார்நான் இரவினில் விழித்திருப்பேன்
சோரா விழியிமை ஒருநாள் சோர்ந்தால்
    தூற்றுவர் பழிகள் சாற்றுவர் பொறுத்திருப்பேன்

தெருவிலென் னருகினில் சிறுவர்கள் ஆடித்
    திரிந்திடு வார்மனம் மகிழ்ந்திருப் பார்விருப்பால்
ஒருகால் உடையேன் நடவா நிலையேன்
    ஓடிட முடியாக் கவலையில் நானிருப்பேன்