பக்கம் எண் :

பாடுங்குயில் (பாடல்கள்)147

18
நமக்குத் தொழில்

பாடல் பொழிந்திடும் என்வாயை-பள்ளிப்
    பாடம் மொழிந்திட வைத்தாயே!
கூடும் முகில்வான் மிதப்பேனைப்-பள்ளிக்
    கூடச் சிறையுள் வதைத்தாயே!

காலங் கடந்துல காள்வேன்நான்-கடிகைக்
    காலங் கணக்கிட வாழ்வேனோ?
ஞாலம் புகழ்ந்திட வாழ்வேன்நான்-சிறுவர்
    நாவிற் படமனந் தாழ்வேனோ?

கற்பனை வானில் பறப்பேனா? -பாழுங்
    கட்டுரைத் தாள்கள் திறப்பேனா?
பொற்புள பாமலர் பறிப்பேனா? - பற்றாப்
    பொருள்தனை எண்ணிச் சிரிப்பேனா?

செம்மை வளர்த்துல காக்குவனோ? - பொழுதைச்
    *செம்மை தெளித்தினும் போக்குவனோ?
மும்மைத் தமிழ்தனை ஊக்குவனோ?-என்றன்
    மூச்சைப் பழுதுற நீக்குவனோ?

நாட்டை வளர்த்திட வேவந்தேன்-வாழ்வின்
    நன்மை தளர்ந்திட வேநொந்தேன்
நாட்டை மறந்திடும் பாவந்தான்-அங்கே
    நாடக மாடுவ தேகண்டேன்


*செம்மை தெளித்து - சிவப்புமை தெளித்து