பக்கம் எண் :

பாடுங்குயில் (பாடல்கள்)151

21
நானொரு குழந்தை

குடும்பம் எனக்கோர் நடைவண்டி-நல்ல
    கொள்கை வெறிதான் தொடர்வண்டி
இடும்பை தவிர்த்திடும் முப்பாலே-என்னை
    இனிதே வளர்த்திடும் தாய்ப்பாலாம்

ஆயும் மொழியே சிறுகோலி-அதனை
    அறிவால் தெறிப்பேன் குழிகோலி
பாயும் குழியோ கவியாகும்-ஆடல்
    பார்த்து மகிழ்வது புவியாகும்

பாமலர் என்றன் மழலைமொழி-பாட்டில்
    பாவும் பொருளே குவளைவிழி
மாமழை வானந் தவழும்வழி-அங்கே
    மதியம் உருள்பந் தெனதுவழி

காவியம் என்றன் மணல்வீடு- பொங்கும்
    கற்பனை யதுதான் சிறுசோறு
வாவினி அம்மா மகிழ்வோடு-நெஞ்சின்
    வாழை விரிப்பேன் பரிவோடு

உலகின் நிலையே தெரியவிலை-அங்கே
    உண்மையும் பொய்யும் புரியவிலை
அலகில் விளையாட் டாடிடுவேன்-என்னோ
    டாரும் வரவிலை கூடிடவே