பக்கம் எண் :

பாடுங்குயில் (பாடல்கள்)153

22
என்றும் நானோர் இளைஞன்

என்றும் நானோர் இளைஞன்-பாடல்
    எழுதிக் கொழிக்குங் கவிஞன்
ஒன்றும் வாழ்விற் சுவைஞன்-நெஞ்சில்
    உணர்ச்சித் துடிப்போ மிகைஞன்

செந்தமி ழமுதம் உண்டேன்-முதுமை
    சிறிதள வேனும் அண்டேன்
சிந்தையில் இளமை கொண்டேன்-உலகம்
    சிறிதாய்த் தோன்றிடக் கண்டேன்

கற்பனைப் பெண்ணே வருவாய்-நின்றன்
    கைகளை என்பால் தருவாய்
பொற்கலன் ஆயிரந் தருவேன்-அவையே
    புதுமைக் காவிய உருவாம்

ஊரார் ஏதோ மொழிவார்-அதுதான்
    உளரும் வாயர் தொழிலாம்
பாராய் எனைநீ விழியால்-என்னைப்
    பழகிய பின்நீ குழைவாய்

என்றும் உனதே நெஞ்சம்-அதுவே
    எழிலார் மலர்சேர் மஞ்சம்
ஒன்றிய ஆசையிற் கெஞ்சும்-எனைநீ
    ஒதுக்கிடின் உயிரே அஞ்சும்