பக்கம் எண் :

பாடுங்குயில் (பாடல்கள்)159

25
கற்பனை மன்னவன்

கவியெனப் போற்றிடும் பேர்படைத்தான்- நெஞ்சில்
    கற்பனை யாலொரு பார்படைத்தான்
புவியதை ஆண்டிடக் கோலெடுத்தான் -அங்கே
    புதுமைகள் பற்பல தான்கொடுத்தான்

வறுமைப் பகையொடு போர்தொடுத்தான்-மக்கள்
    வளமுடன் வாழ்ந்திடச் சீர்கொடுத்தான்
சிறுமைக் குறைகளை வேரெடுத்தான்-ஆண்மைச்
    சிங்கமென் றோங்கிடும் பேரெடுத்தான்

நலமிகும் ஆட்சியொன் றேவிரித்தான்-யாவும்
    நாட்டவர்க் கேபொது வென்றுரைத்தான்
குலமகன் மன்னவன் போற்சிரித்தான்-என்றும்
    கோட்டைகள் கட்டிட வேகுறித்தான்

கற்பனை நாட்டையே மேல்நினைந்தான்-மண்ணில்
    கட்டிய வீட்டினைத் தான்மறந்தான்
முற்பட மாந்தரை யேநினைந்தான்-கொண்ட
    மொய்குழல் மாதினைத் தான்மறந்தான்

பாட்டுல குக்கவன் சோறளித்தான்-பாரில்
    பைந்தமிழ்க் கோவெனப் பேரெடுத்தான்
வாட்டம ளித்திடும் சோர்வினைத்தான்-சொந்த
    வாழ்வினில் கண்டுகண் ணீர்வடித்தான்