பக்கம் எண் :

பாடுங்குயில் (பாடல்கள்)161

26
கவிதைக் காதலி

இன்பங்கள் சூழ்கின்ற போது-நெஞ்சை
    எட்டிப் பிடித்துக் களிப்பிக்கும் மாது
துன்பங்கள் வந்துற்ற போதும்-என்னைத்
    தொட்டுப் பிடித்துக் களிப்பாளெப்போதும்

கலைமாதின் உள்ளமோ வெள்ளை-என்றன்
    கலிதீர்க்க வந்தாடும் போதிலோர் பிள்ளை
அலைமோதும் துன்பத்தில் *தள்ளை-வஞ்சி
    †ஆசிரியத் தருகின்ற இன்பமோ கொள்ளை

தனியாக நான்வைகும் வேளை-என்பால்
    தாவிக் குதித்துச் சிரிப்பாள்அப் பாவை
இனிதாக வாய்த்துள்ள கோவை-வாயால்
    ஈந்தாளே அவ்வின்பம் எந்நாளும் தேவை

கண்ணுக்குள் கண்ணாக நிற்பாள்-காதல்
    காட்டாற்று வெள்ளைத்தைக் கண்டேத விப்பாள்
பெண்ணுக்குள் ஒன்றாகி நிற்பேன்-ஆ ஆ
    பேரின்பம் பேரின்பம் விண்ணுக்கும் அப்பால்

கவிமாது முன்வந்த காலை-இன்பங்
    காணாமல் கூடாமல் வேறென்ன வேலை?
அவளாகத் தான்வந்து மாலை-சூட்டி
    அணைப்பாள் தொடுத்தே கொடுப்பேன்பா மாலை


* தள்ளை - தாய் † ஆசுஇரிய - குற்றம் நீங்க