பக்கம் எண் :

162கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

கண்காட்டி விட்டங்குச் செல்வாள்-நானும்
    கைகாட்ட என்பால்வந் தேதேதோ சொல்வாள்
பண்காட்டும் பாட்டொன்று சொல்வேன்-இன்னும்
    பாடென்று பாடென்று நெஞ்சிற்பு கல்வாள்

நெஞ்சங்கள் ஒன்றாகும் போது-மற்ற
    நினைவேதும் இல்லாமல் செல்வேன் விண்மீது
கொஞ்சுங்கள் கொஞ்சுங்கள் என்றே-வஞ்சி
    கொண்டாடி மன்றாடிக் கெஞ்சுவாள் நின்றே

என்பாட்டில் இன்பங்கள் கண்டாள்-விஞ்சும்
    எழில்கொண்ட பொற்பாவை நீள்காதல் கொண்டாள்
பின்பாட்டுப் பாடாமை கண்டாள்-என்னைப்
    பித்தாக்கி நீங்காத சொத்தாக்கிக் கொண்டாள்

22.9.1975