பக்கம் எண் :

பாடுங்குயில் (பாடல்கள்)171

32
மலர் தந்த பாடம்

அரும்பிச் சிரிக்குஞ் சிறுமலரே-நெஞ்சை
    அள்ளிக் கவரும் எழிலுருவே
விரும்பிக் கிடக்கும் எனதுளமே-நின்பால்
    வீசும் மணமும் நுகர்வுறவே

இதழை விரித்தே நகைபுரிவாய்-வண்டோ
    ஏழிசை பாடச் சுவைதருவாய்
புதுமைப் பொலிவால் நலந்தருவாய்-மாதர்
    போற்றிப் புகழும் நிலைபெறுவாய்

விரியும் இதழில் சிறுபணிகள்-காலை
    வீழும் பொழுதில் பெறுமழகு
பரிதிக் கதிரால் மெருகுபெற-நின்னைப்
    பார்த்துக் களிப்பேன் இருவிழியால்

உருவாய் வருங்கால் அரும்பென்பார்-நின்றன்
    உடலோ பருத்தால் போதென்பார்
சிறிதே விரிந்தால் மலரென்பார்-கீழே
    சிதறி விழுந்தால் *வீஎன்பார்

உலகில் பிறந்தாய் மணந்தந்தாய்-மாதர்
    உள்ளம் மகிழத் துணைநின்றாய்
இலகும் எழிலைப் பிரிகின்றாய்-வாடி
    எங்கோ-தரையில் உதிர்கின்றாய்


* வீ - வாடி விழும் மலர்