பக்கம் எண் :

பாடுங்குயில் (பாடல்கள்)215

66
படியாத பிள்ளை

சொன்னபடி கேளாத பிள்ளை-பெற்றால்
தொடருவது தந்தைக்கு மாறாத தொல்லை
முன்னுணர்ந்து பாராமல் அன்று-காதல்
மூழ்கித் திளைத்தபயன் காணுகிறான் இன்று

படியென்று சொன்னாலுங் குற்றம்-நல்ல
பண்போடு நடவென்று சொன்னாலுங் குற்றம்
முடிவென்ன தெரியாது நாளை- வாழ்வில்
முன்னேற வழியேது படியாத காளை

ஊர்சுற்றி ஊர்சுற்றி வந்தால்-வாழ்வில்
உண்டாகும் பயனென்ன பெற்றமணம் நொந்தால்?
வேர்விட்ட ஆல்வற்றி நின்றால்-தொங்கும்
விழுதன்றோ தாங்கிப் பிடித்திடல் நன்றாம்

நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு-கல்வி
நாடிப் படிக்காத வாழ்வன்றோ காடு?
தோட்டத்தைப் பாழாக்கி நின்றால்-ஊரார்
தூற்றிப் பழித்துக்க தைப்பார்கள் கண்டால்

குற்றமது செய்கின்ற போது-தந்தை
கூறா திருப்பானோ? ஈதென்னதீது?
பெற்றவர்கள் கண்டித்து நின்றால்-என்ன
பிழைவந்து நேருமவர் சொன்னபடி சென்றால்?