பக்கம் எண் :

பாடுங்குயில் (பாடல்கள்)217

67
நான் பாடும் போது...

என்னைம றந்துநான் பாடல்பு னைந்திட
    எண்ணிவ ரைந்திடும் போதினிலே
எத்தனை எத்தனை இன்பங்கள் சூழ்ந்துளம்
    எங்கணும் பாய்ந்தெனை மோதுமடா
அன்னைமொ ழித்தமிழ் அத்தனை ஆற்றலை
    அன்புடன் என்னிடம் தந்ததடா
ஆயிரம் நன்றிகள் கூறிட நெஞ்சினில்
    ஆவலும் மீறியே வந்ததடா

யாழிசை கூடிய ஏழிசைப் பாடல்கள்
    எங்கும்நி றைந்தும லர்ந்திடுமே
யானுள மாளிகை வானில்மி தந்திட
    யாண்டும்ப றந்துதி ரிந்திடுவேன்
தோழமை கூடிடத் தூய மயிற்குலம்
    தோகைவி ரித்தெதிர் ஆடிடுமே
துய்ய மலர்க்குலம் வாயைவி ரித்திடும்
     தும்பிகள் யாழெனப் பாடிடுமே

கற்பனை ஊறிடக் காவியம் ஒன்றனைக்
    கண்டுநி கர்த்திடப் பாடிடுவேன்
காலிற்ச தங்கைகள் கொஞ்சிட மங்கையர்
    கண்ணெதிர் நின்றவர் ஆடிடுவார்
பொற்புறு கிண்ணியில் பூமணத் தேறலைப்
    பூவையர் பற்பலர் ஊற்றிடுவார்
பூங்கொடி போலிடை தாங்கிடு வார்மனம்
    பொங்கிட வேவெறி ஏற்றிடுவார்