பக்கம் எண் :

22கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

13
தமிழ் - என் தெய்வம்
-

கோவில் எனது நெஞ்சம் - தனிலே
    கூடி யருள் புரிவாய்
காவியப் பா மாலை - அணிந்தே
    காத்திட வேண்டு மம்மா
நாவின் மிசை யிருப்பாய் - எனக்கு
    நல்ல மனந் தருவாய்
பாவினில் சொல் லிலெல்லாம் - சக்தி
    பாய்ந்து வர வேண்டும்

உன்றன் திருப் பெயரைச் - சொல்லி
    ஊரினை ஏய்த் திடுவோர்
நன்றென வா ழுகின்றார் - நின்றன்
    நன்மையை நா டுகிலார்
துன்றிய பண் பினரும் - உன்பால்
    தூயநல் லன் பினரும்
நின்று வருந் திடவே - செய்தல்
    நீதியின் பாற் படுமோ?

நெஞ்சில் உனை நினைந்தே - என்றும்
    நேர்மையில் நிற் பவரை
மிஞ்சும் வறு மையினால் - துன்பம்
    மேலிடச் செய் துநின்றாய்
வஞ்சனை செய் மனிதர் - அவர்க்கு
    வாழ்வுகள் தந் துநின்றாய்
வஞ்சியுன் சோ தனையோ? - எங்கள்
    வாழ்வெலாம் வே தனையோ?