பக்கம் எண் :

பாடுங்குயில் (பாடல்கள்)227

72
திறந்தன கதவுகள்

(பணியிலிருந்து விடுபட்டபொழுது பாடியது.)

கூண்டின் கதவுகள் திறந்தன-என்
    கோலச் சிறகுகள் விரிந்தன
யாண்டும் நினைவுகள் பரந்தன-என்
    ஆசைக் கனவுகள் உயர்ந்தன

பூட்டும் விலங்குகள் ஒடிந்தன-ஏவல்
    பூணுஞ் சடங்குகள் முடிந்தன
வாட்டும் *வழக்குகள் பொடிந்தன-துன்ப
    வாழ்வின் இரவுகள் விடிந்தன

பூண்ட இளமையும் கழிந்தது -பாதி
    பூக்கும் புதுமையில் கழிந்தது
ஆண்டோ அறுபது தொடர்ந்தது-பாதி
    ஆசான் பணியில் நடந்தது

தேக்கும் ஒருதடை இனியிலை-என்பால்
    தீமை வரஒரு வழியிலை
பூக்கும் கவிமலர் அளவிலை-நெஞ்சம்
    பொங்கும் மகிழ்வினிற் கடலலை

தோள்கள் மலையென நிமிர்ந்தன-நெஞ்சில்
    தூய்மைத் துணிவுகள் வளர்ந்தன
நாள்கள் மகிழ்வுறப் பிறந்தன-எண்ணம்
    நாட்டின் பணியிடை விரிந்தன

*வழக்குகள் - இந்தியெதிர்ப்பு வழக்கு, மற்றுமொரு பொய் வழக்கு.