பக்கம் எண் :

பாடுங்குயில் (பாடல்கள்)231

74
அருகில் அவளிருந்தால்...

அவளும் தமிழும் அருகிலிருந்தால்
ஆயிரம் ஆயிரம் பாடல் வரும்

- அவளும்

குவளை மலரில் குளிர்விழி பெறுவாள்
குவியிதழ் முல்லையில் குறுநகை புரிவாள்

- அவளும்

தண்பனி மலைமேல் தவழும் முகிலால்
தனதுடல் எழிலை மூடிடும் *துகிலாள்
வீண்படும் மலையில் வீழ்ந்திடும் அருவி
விரலிசை மீட்டும் யாழெனுங் கருவி

- அவளும்

காலையில் கீழ்த்திசைக் கடல்மிசை எழுமோர்
கதிர்தான் என்மனக் *கன்னியின் முகமாம்
மாலையில் மேற்றிசை மினுக்கிடும் வானே
மனங்கவர் எழில்கொளும் மங்கையின் மேனி

- அவளும்

தண்பனி நிலவில் தனிநடம் புரிவாள்
தளிரில் மலரில் பனியென உறைவாள்
கண்துயில் மருவும் பசும்புல் தரையாள்
களிகொள் மயில்போல் ஆறெனத் திரிவாள்
- அவளும்


* துகிலாள் - ஆடையையுடைவள்
* கன்னி என்றது இயற்கையை.