பக்கம் எண் :

காவியப் பாவை33

18
தமிழ் - என் மகன்
-

பிள்ளைக் கலிதனைத் தீர்க்கவந்தாய் - அன்புப்
    பெட்டக மேஇன்பம் சேர்க்க வந்தாய்
உள்ளக் கவலைகள் ஓட்டவந்தாய் - என்றன்
    ஓவிய மேபுகழ்க் காவியமே

கொஞ்சுங் கனியிதழ் நீதிறந்தால் - உள்ளம்
    கொள்ளைகொள் ளுங்களி கூடுதடா
விஞ்சு நலந்தரு யாழுடனே - குழல்
    வேண்டுகி லேன்தமிழ் மாமகனே

பைந்தளிர் மேனியைத் தீண்டுகையில் - தமிழ்ப்
    பாலக னேநடை காணுகையில்
பைந்தமி ழேஎன நின்பெயரைச் - சொல்லிப்
    பாடிப் புகழ்ந்துனைப் பேசுகையில்

நின்மொழி என்செவி சேருகையில் - நெஞ்சில்
    நேரும் மகிழ்வினை யாதுரைப்பேன்
என்னுயிர் மூச்சென ஆனவனே - எனக்
    கேதுக்கடா அந்த மேலுலகம்

வீதி களில்விளை யாடுகையில் - என்றன்
    வேதனை யாவுமே ஓடிடினும்
தீது புகுந்து விளைந்திடுமோ - என்று
    செந்தமி ழேமனம் அஞ்சுகிறேன்