பக்கம் எண் :

காவியப் பாவை39

23
தமிழன் ஏக்கம்
-

தமிழன் என்றதுமே-மிகப்பரி
    தாபம் பிறக்குதம்மா!
இமயம் வென்றானே-அவன் இன்று
    ஏற்றங் குறைந்தானே!

சமையம் போகாதோ? - தொல்லைதரும்
    சாதி தொலையாதோ?
சமத்துவ வாழ்வு-மீண்டும்
    தளிர்த்துச் செழிக்காதோ?

உழுபவன் ஒருவன்-உடைதர
    உழைப்பவன் ஒருவன்
பழமையின் பேரால்-பயன்பெறப்
    பார்ப்பவன் வேற்றவனோ?

அழுதிடும் பாலன்-பசியால்
    ஆவி தொலைந்தாலும்
கழுவுவர் பாலால்-அந்தோ
    கல்லுருத் தேவுகளை

ஓட்டைக் குடிசையுள்ளே-உணவின்றி
    ஒட்டி உலர்ந்த மகன்
வேட்டியும் இல்லாமல்-அவனுறும்
    வேதனை தீராதோ?

மாட்டினும் கீழாக-மனிதன்
    மாண்டிடும் தீய நிலை
ஓட்டிட வேண்டுமம்மா-உண்மையை
    ஓர்ந்திட வேண்டுமம்மா