45 பேசும் தெய்வம் - சின்னஞ் சிறியதோர் வாய்திறந்து - மழலை சிந்துகையில்மன நோய்பறந்து பன்னரும் பேரின்பம் ஆகுதடா - சித்தர் பகர்ந்த வெலாமெங்கோ போகுதடா வாரி யணைத்ததைக் கொஞ்சுகையில் - முத்த மாரி வழங்கிடக் கெஞ்சுகையில் மீறி உதைத்திடு காலிரண்டும் - பத்தி மேவி வணங்கிடும் தாளிரண்டாம் வாகண்ணே என்றுகை நீட்டுகையில் - பொக்கை வாய்திறந் தன்பு சிரிக்குதடா சோகம் முதற்பகை மாய்ந்திடவே - அது சுட்டுப் பொசுக்கும்புன் மூரலடா நீராட்டிப் பொட்டிட்டு மேனியிலே - நல்ல நீலப்பட் டாடையைச் சூட்டிச்சிறு தேரோட்டம் ஓட்டிநான் காட்டுகையில் - அது தெய்வத் திருநாளாய்த் தோன்றுதடா மோனத் துயில்கொள்ளும் போதினிலே - இமை மூடிக் கிடக்குங்கண் மீதினிலே ஞானச் சுடரொளி வீசுதடா - தெய்வம் நண்ணிவந் தென்னெஞ்சிற் பேசுதடா கொண்டாடு வாரிடம் கூடிநிற்கும் - அன்பு கூர்ந்தவர் பாற்குடம் நாடிநிற்கும் சண்டாளர் நல்லவர் என்றறியா - நெஞ்சம் சார்ந்திடும் பிள்ளைஎன் தெய்வமடா
இப்பாடல் ‘சாகித்திய அகாடமி’யால் இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. |