பக்கம் எண் :

காவியப் பாவை67

45
பேசும் தெய்வம்
-

சின்னஞ் சிறியதோர் வாய்திறந்து - மழலை
சிந்துகையில்மன நோய்பறந்து
பன்னரும் பேரின்பம் ஆகுதடா - சித்தர்
பகர்ந்த வெலாமெங்கோ போகுதடா

வாரி யணைத்ததைக் கொஞ்சுகையில் - முத்த
மாரி வழங்கிடக் கெஞ்சுகையில்
மீறி உதைத்திடு காலிரண்டும் - பத்தி
மேவி வணங்கிடும் தாளிரண்டாம்

வாகண்ணே என்றுகை நீட்டுகையில் - பொக்கை
வாய்திறந் தன்பு சிரிக்குதடா
சோகம் முதற்பகை மாய்ந்திடவே - அது
சுட்டுப் பொசுக்கும்புன் மூரலடா

நீராட்டிப் பொட்டிட்டு மேனியிலே - நல்ல
நீலப்பட் டாடையைச் சூட்டிச்சிறு
தேரோட்டம் ஓட்டிநான் காட்டுகையில் - அது
தெய்வத் திருநாளாய்த் தோன்றுதடா

மோனத் துயில்கொள்ளும் போதினிலே - இமை
மூடிக் கிடக்குங்கண் மீதினிலே
ஞானச் சுடரொளி வீசுதடா - தெய்வம்
நண்ணிவந் தென்னெஞ்சிற் பேசுதடா

கொண்டாடு வாரிடம் கூடிநிற்கும் - அன்பு
கூர்ந்தவர் பாற்குடம் நாடிநிற்கும்
சண்டாளர் நல்லவர் என்றறியா - நெஞ்சம்
சார்ந்திடும் பிள்ளைஎன் தெய்வமடா


இப்பாடல் ‘சாகித்திய அகாடமி’யால் இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.