பக்கம் எண் :

68கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

46
செற்றம் தவிர்ந்தேன்
-

அடஞ்செய்தாய் நீஎன் றடித்தேன் - பின்னர்
அழுகின்ற கண்கண்டு நெஞ்சந் துடித்தேன்
குடங்கையில் கன்னத்தைச் சேர்த்துத் - துயில்வாய்
குறுநெற்றி எழில்காட்டும் மேலாக வேர்த்து

கண்ணீர் வழிந்துலரும் கன்னம் - நெஞ்சைக்
கலக்குவதை யறியாய்நீ கண்ணயர்ந்த பின்னும்;
தண்ணீர் நிறைந்தகுளத் தோரம் - நின்று
தாவிக் குதித்துவிளை யாடினையிந் நேரம்

துள்ளித் திரிந்துவிளை யாடி - கெட்ட
துட்டத் தனம்புரியும் சிறுவரொடு கூடிப்
பள்ளிக்குப் போகாமல் நின்றாய் - கண்ட
பலகாரப் பொருளைநீ வாங்கியே தின்றாய்

பாடம் படிக்கின்ற வேளை - விட்டாற்
பயனுண்டோ ஆசானுக் கென்சொல்வாய் நாளை?
ஓடும் படிக்கான செல்வம் - அன்றாம்
ஓதித் தெளிந்துணரும் நிலையான கல்வி

சட்டையை அழுக்காக்கி விட்டாய் - நோய்க்குச்
சாருமிடம் நீதந்து மேனிநலம் கெட்டாய்
பட்டம்விட் டாடுகிறபோது - செய்தாய்
பக்கத்து வீட்டுக் குழந்தையொடு வாது