பக்கம் எண் :

காவியப் பாவை73

தண்ணீர்க் குடங்களையும் பார்ப்பான் - மூடும்
தட்டங்கள் விட்டெறிந்து தாளங்கள் சேர்ப்பான்
கண்ணீரைக் கொட்டி அவன் தீர்ப்பான் - தட்டுக்
காலிலே பட்டுத் தெறித்தவுடன் ஆர்ப்பான்

-சொன்னாலும்

தாலாட்டித் தொட்டிலிலே போட்டால் - மெல்லத்
தலைதூக்கிச் சிரிப்பானே என்பாட்டைக் கேட்டால்
வாலாட்டித் திரிகின்ற சேட்டை - சொன்னாலும்
வயிறெரியுங் கேளடிநான் படுகின்ற பாட்டை

-சொன்னாலும்

என்றேனும் நூலொன் றெடுப்பேன் - கண்டால்
என்னைப் பிடித்துத் துவைத்துக் கடிப்பான்
அன்றேஅந் நூலுக்கும் ஆயுள் - தீரும்
ஆனாலும் என்னைத்தான் அவர்நெஞ்சங் காயும்

-சொன்னாலும்

கதவைத் திறந்தாலே போதும் - கண்டு
கடிதோடி முன்வாயில் தெருவிலே வீழும்
பதறி நான் ஓடிவரும் முன்னே - அந்தப்
பவழச்செவ் வாய்நிறையும் பெருவாரி மண்ணே

-சொன்னாலும்

பஞ்சணையில் துயில்கொள்ளும் போது - சின்ன
பாலகனின் பால்வழியும் கண்ணிமையின் மீது
கொஞ்சிவிளை யாடுமெழில் காண்பேன் - செய்த
குறும்பெல்லாங் காணாத தாயுள்ளம் பூண்டேன்

-சொன்னாலும்