பக்கம் எண் :

78கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

52
பாரதியின் குரல்
-

வீதிகள் எங்கணும் என்புகழே - பாடி
    வெற்றி முழக்கிடும் மானிடரே
சாதிகள் இன்னும் தொலைத்தீரோ - பொய்மைச்
    சாத்திரம் ஏதும் விடுத்தீரோ?

ஆடியும் பாடியும் கூத்தடிப்பீர் - என்றன்
    ஆர்வமெ லாம்எங்கோ போட்டழித்தீர்
பாடிய என்னுடைப் பாக்களிலே - அந்தோ
    பற்பல ஊனங்கள் ஆக்கிவிட்டீர்!

தன்னலம் ஒன்றையே மேம்படுத்த - என்பால்
    சாகசக் காதலைக் காட்டுகிறீர்
என்னுளம் யாதென எண்ணுகிலீர் - உமக்
    கேற்பவே என்னைச் சுழற்றுகிறீர்!

தெய்வங்கள் பற்பல வேண்டுகிறீர் - பகைத்
    தீயை வளர்த்திங்கு மாளுகின்றீர்
உய்யும் வழிசொன்ன என்மொழியைப் - புதைத்
    தோங்கிய மண்டபங் கட்டிவிட்டீர்!

கோவிலில் மாணவர் கல்விபெறப் - பள்ளிக்
    கூடங்கள் ஆக்கிட முன்வருவோர்
ஆவலைக் கொன்று விழுங்குதற்கே - சட்டம்
    ஆக்கிட முன்னிருந் தார்ப்பரிப்பீர்!