பக்கம் எண் :

காவியப் பாவை79

தீண்டாமை என்றொரு சாக்கடையை - இன்னும்
    தெய்வத்தின் முன்னரும் பாய்ச்சுகின்றீர்
வேண்டாமென் றெத்துணைப் பாடல்சொன்னேன் - எலாம்
    வீணாக்கி என்பெயர் பாடுகின்றீர்!

ஐயையோ என்னுயிர்ப் பாடல்பல - இன்னும்
    ஆரு மறியாமல் பூட்டிவைத்தீர்
வையைக் கரைதனில் ஓரறையில் - அவை
    வாழ்விழந் திங்ஙனம் மாய்வதுவோ?

செந்தமிழ் இன்பம் சிறந்ததென்றேன் - சுவைத்
    தேனினும் மேலதாச் செப்பிவைத்தேன்
நொந்திட என்னுளம் செய்துவிட்டீர் - என்றன்
    நோக்கம் அனைத்தும்வீண் ஆக்கிவிட்டீர்!

ஒண்டவந் தார்விடுத் தோடியபின் - நாட்டில்
    ஒப்பில் சமுதாயம் ஆக்கிடவே
கண்ட கனவெலாம் பாழ்படுத்தி - நெஞ்சும்
    கண்ணுங் கலங்கிடச் செய்துவிட்டீர்!

இன்னுமித் தீநெறி நாடுவதை - நீக்கி
    ஏற்றம்பெற் றோங்க உழைத்திடுவீர்
சொன்னதைச் செய்கையில் காட்டிடுவீர் - என்னைத்
    தூயநல் லன்புடன் நாடிடுவீர்!