தீண்டாமை என்றொரு சாக்கடையை - இன்னும் தெய்வத்தின் முன்னரும் பாய்ச்சுகின்றீர் வேண்டாமென் றெத்துணைப் பாடல்சொன்னேன் - எலாம் வீணாக்கி என்பெயர் பாடுகின்றீர்! ஐயையோ என்னுயிர்ப் பாடல்பல - இன்னும் ஆரு மறியாமல் பூட்டிவைத்தீர் வையைக் கரைதனில் ஓரறையில் - அவை வாழ்விழந் திங்ஙனம் மாய்வதுவோ? செந்தமிழ் இன்பம் சிறந்ததென்றேன் - சுவைத் தேனினும் மேலதாச் செப்பிவைத்தேன் நொந்திட என்னுளம் செய்துவிட்டீர் - என்றன் நோக்கம் அனைத்தும்வீண் ஆக்கிவிட்டீர்! ஒண்டவந் தார்விடுத் தோடியபின் - நாட்டில் ஒப்பில் சமுதாயம் ஆக்கிடவே கண்ட கனவெலாம் பாழ்படுத்தி - நெஞ்சும் கண்ணுங் கலங்கிடச் செய்துவிட்டீர்! இன்னுமித் தீநெறி நாடுவதை - நீக்கி ஏற்றம்பெற் றோங்க உழைத்திடுவீர் சொன்னதைச் செய்கையில் காட்டிடுவீர் - என்னைத் தூயநல் லன்புடன் நாடிடுவீர்! |