பக்கம் எண் :

80கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

53
ஏழையைக் கண்டிலேன்!
-

கல்லைக் கனிய வைத்தான் - அங்கே
    கற்பனை தேக்கி வைத்தான்
சொல்லத் துடிதுடித்தே - கவிதை
    துள்ளிக் குதித்ததடா!

உண்ணவும் நேர மிலான் - சற்றே
    ஓய்வும் ஒழிவு மிலான்
எண்ண மெலாங் குவிய - நெஞ்சில்
    ஏக்கம் நிறைந்ததடா!

ஐந்து விர லிடையே - சிற்றுளி
    ஆடித் திரிந்ததடா!
அந்த நடந் தனிலே - அவன்விழி
    ஆழ்ந்து பதிந்ததடா!

எண்ணமும் சிற்றுளியும் - பெற்ற
    ஏந்திழைப் பெண்ணொருத்தி
வண்ண முகங் காட்டிச் - சிற்ப
    வாழ்வினைக் கொண்டுநின்றாள்

மங்கையைப் போற் றிடவே - பளிங்கு
    மாளிகை கட்டி வைத்தார்
எங்கும் அவள் புகழே - கண்டேன்
    எத்தனை விந்தையடா!

மங்கைக்கு வாழ்வளித்த - சிற்பி
    மாய்ந்து மறைந்துவிட்டான்
எங்கெங்குத் தேடினுமே - அந்த
    ஏழையைக் கண்டிலனே!