பக்கம் எண் :

104கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

*துப்பாக்கும் பொழுதத்துப் புகைகள் கூடிச்
    சுடர்மறைக்கும் மேகமென நாளுந் தோன்றும்

அப்போது வருமுறவோர் அடடா! சொல்லில்
    அடங்குவதோ? ஆயிரமாம் அதற்கும் மேலாம்(3)

எங்கிருந்தோ எவரெவரோ வருவார்; வந்திங்
    கென்னலமும் மனைநலமும் வினவி நிற்பார்;

தங்கியிருந் தெதையெதையோ கதை யளப்பார்;
    தயங்காமல் உறவுரைப்பார்; ‘உங்கள் பாட்டன்

தங்கைக்குக் கணவனுடன் பிறந்தான் மாமி
    தம்பிக்கும், என்பாட்டி தங்கை மாமன்

பங்காளி மகளுக்கும் மணமு டித்த
    பனையூரார் எங்களவர்’ என்று சொல்வார்(4)

இப்படியே உறவுரைத்து வந்து சூழும்
    என்சுற்றம் மாநாட்டுக் கூட்டம் ஒக்கும்;

முப்பொழுதும் திருமணத்துக் காலம் போல
    மொய்த்திருந்து விருந்துண்பார் ஒலியே கேட்கும்;

ஒப்புரவுப் பண்புணர்ந்தேன் உவந்து நிற்பேன்;
    உறவினர்க்கு **ஙப்போல நானி ருந்தேன்;

இப்புவியில் இத்தனைப்பேர் உறவி ருக்க
    எனக்கென்ன குறையென்று நிமிர்ந்தி ருந்தேன்(5)

வானத்து வெண்ணிலவாய் நானி ருப்பேன்
    வட்டமிடும் உறவினர்கள் விண்மீன் ஆவர்;

கானத்துப் பழுமரத்தில் கனிகள் உண்ணக்
    கடுகிவரும் பறவையினம் போலச் சூழ்வர்;


*துப்பாக்கும் - சமைக்கும்
**ஙப்போல் - ‘ஙப்போல் வளை’ என்னும் முதுமொழிக் கிணங்க.