பக்கம் எண் :

110கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

17. உரிமை

எண்சீர் விருத்தம்

சமயத்தில் உதவுகின்ற தமிழர் பண்பால்
    தலைமைபெறும் பரந்தாமப் பெரியோய்! எங்கள்

தமிழாய்ந்த புலவர்படைத் தலைவ ரேறே
    தமிழ்ச்சிங்கப் பாரதியே! இவ்வ ரங்கில்

அமிழ்தெனும்நம் தமிழ்பாடக் குழுமி வந்த
    அன்புடையீர்! தாய்க்குலத்தீர்! உரிமை காக்கும்

எமதருமை மதுரைநகர்ப் பேரூர் வாழ்வீர்!
    என்கவிதை தலைவணங்கிப் பாடு கின்றேன்(1)

காஞ்சித் தென்றல்

தென்பொதிய மலைஒன்றே தமிழர்க் காகத்
    தென்றலெனும் மென்காற்றை நல்கிற் றென்பர்;

அன்புடையீர்! காஞ்சிபுரப் பேரூர் தானும்
    அறிஞரென்ற தென்றலொன்றை நல்கக் கண்டோம்;

வன்புடைய வாடைவரின் பொதியத் தென்றல்
    வாயடங்கும்; இத்தென்றல் வாடை காணின்

தென்புடைய புயலாகிப் பகையை மாய்க்கும்
    தெருவெல்லாம் மணம்பரப்பும் வாழ்க தென்றல்(2)


தலைமை தாங்க ஒப்புக் கொண்டவர் வாராமையால் திரு. அ.கி. பரந்தாமனார் தலைமை தாங்க இசைந்தமையால் ‘சமயத்தில் உதவுகின்ற’ என அடைமொழி தரப்பட்டது. பாரதி - நாவலர் சோமசுந்தர பாரதியார் காஞ்சித் தென்றல் - கவியரங்கைச் சுவைத்துக் கொண்டிருந்த அறிஞர் அண்ணா