பக்கம் எண் :

114கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

சொல்லும் செயலும்

அனைத்துலக நிலைபேசி, அமைதி ஓங்க
    ஆர்ப்பரித்து, நாடுபிடிக் கின்ற எண்ணம்

தினைத்துணையும் எமக்கில்லை என்ற கொள்கை
    தீவிரமாப் பேசுகிற அண்டை நாட்டார்,

முனைத்தெழுந்து பிறரெல்லைக் கோட்டைத் தாண்டி
    மீண்டுமவர் உலகப்போர் மூளு தற்கு

நினைக்கின்றார்; பிறருரிமை பறிப்ப தற்கு
    நினைப்பவரைத் தடுப்பதுநம் உரிமை யாகும்(12)

எழுத்துரிமை

எழுத்தாளர் மன்றத்திற் பாடு கின்றேன்
    எழுத்துரிமை ஓரளவு உரைத்தல் வேண்டும்;

எழுத்தாளர்க் கிந்நாட்டிற் பஞ்ச மில்லை
    ஏனென்றால் அஃதொன்றே எளிமை யாகும்;

முழுத்தாளில் எழுதமட்டுந் தெரிந்தாற் போதும்
    மொழியறிவு, கலையுணர்வு, கல்வி ஆற்றல்,

தழைத்தோங்கும் சிந்தனைகள் ஒன்றும் வேண்டா;
    தமிழெழுத்துச் சிலமட்டுந் தெரிந்தாற்போதும்(13)

இருக்கின்ற தமிழ்நூலைப் படிப்ப துண்டா?
    எவரெவரோ சிந்தித்து வரைந்த நூலில்

பொறுக்குகின்ற பேரெல்லாம் இந்த நாட்டிற்
    புகழ்மிக்க எழுத்தாளர்! அவரை எல்லாம்

உருத்ததட்டித் தடுப்பதற்கோர் வகையும் இல்லை;
    ஓரிருவர் தடுத்தாலும் உரிமை என்பார்;

கிறுக்கரிடம் அகப்பட்ட தமிழ ணங்கே!
    கேடின்றி நினக்குரிமை கிடைப்ப தென்றோ?(14)