பக்கம் எண் :

கவியரங்கில் முடியரசன் 115

தமிழெழுதிச் சோறுண்டு வாழ்ந்தி ருப்போர்
    தனிமொழியைத் தாய்மொழியை இகழ்ந்து பேசித்

தமிழகத்தில் தமிழில்எழுத் தாளர் ஆவர்;
    தப்பின்றிக் கலப்பின்றி எழுதும் முன்னோர்

தமிழெல்லாம் பழித்துரைக்கும் கயமை யிங்கு
    தழைப்பதுவோ உரிமை? அது மடமை; எங்கள்

தமிழிகழ்வோர் நாவடக்கக் கொதித்துப் பாயும்
    தன்மானம் உடமையன்றோ உரிமை யாகும்(15)

எழுத்தாளர் நெஞ்சத்தில் உரிமை வேண்டும்;
    எப்படியோ உண்டுடுத்து மற்றோ ரைப்போல்

பிழைத்தாலே போதுமென எழுதிக் கொட்டி
    வால்பிடித்துப் பின்செல்லல் உரிமை யன்று;

வழுக்காணின் அஞ்சாமல் எழுதி, வாய்மை
    வாழ்வதற்கு வழிவகுத்தல் உரிமை யாகும்;

இழுக்கான நடையெழுதிப் பிறரைத் தாக்கி
    எழுதுவதே தொழிலாதல் உரிமையன்று(16)

எழுத்துரிமை எனச்சொல்லி எழுதித் தீர்க்கும்
    ஏடுகளில் சிலவற்றைக் காணின் அங்குப்

புழுத்திருக்கும் கயமைகளே காணும்; எண்ணும்
    புலன்நடுங்கும் கைநடுங்கும் கண்கள் கூசும்;

கொழுத்தவர்கள் குடித்தனத்தில் நடக்குந் தீமை,
    கொடுப்பதற்கோ செய்தித்தாள்? படிப்பார் நெஞ்சை

அழுக்காக்கிக் கெடுப்பதற்கோ உரிமை? நல்ல
    அறிவுடையார் இச்செயலைச் சிறுமை என்பர்(17)