பக்கம் எண் :

116கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

பேச்சுரிமை

அன்றிருந்த அரசரிடம் குறைகள் காணின்
    அருகிருந்து வற்புறுத்தி அறமு ரைத்தார்

நன்றுடைய தமிழ்ப்புலவர்; வரிகு றைக்க
    நயவுரைகள் புகன்றிருந்தார்; அரசு மன்றில்

சென்றிருந்து வழக்குரைத்தாள் கற்பின் செல்வி;
     செந்தமிழின் முன்னூல்கள் செப்பும் உண்மை

ஒன்றுண்டு; முடியரசன் ஆட்சி தன்னில்
    உரிமையெலாம் இருந்ததென உணரு கின்றோம்(18)

அரசியலில் குறைகாணின் இடித்து ரைக்கும்
    அவ்வுரிமை அனைவர்க்கும் வேண்டும் இன்று;

முறைசெய்வோர் அவ்வுரிமை பறிப்ப தற்கு
    முனைவதுவும் நன்றன்று, செவிகொ டுத்துப்

பரிவுடனே ஏற்பதிலோர் நன்மை யுண்டு,
    பாராளும் முறைமையது; வேண்டு மென்றே

நரிபடைத்த குணமுடையார் குறைகள் சொல்லி
    நால்வருண முறைபுகுத்தல் உரிமை யன்று(19)

பேச்சுரிமை உண்டென்று சங்கம் ஏறிப்
    பித்தரைப்போல் மனம்போன போக்கில் எல்லாம்

தீச்சொல்லை வழங்குவதும் உரிமை யன்று;
    தெளிவான கருத்தொன்றே கூறல் வேண்டும்;

மூச்சுக்கு முந்நூறு வசவு சொல்லி
    முறைகெட்டுப் பேசுவதும் உரிமை யாமோ?

ஏச்சாலே என்னபயன்? எதிரி யுள்ளம்
    ஏற்கும்வகை பேசுதலே உரிமை யாகும்(20)

சிந்தனையை எண்ணத்தை அடிமை யாக்கிச்
    செயற்படினோர் நலமில்லை; அறிவு கொண்டு

சிந்திக்க முனைவதுவும் சிந்தித் தாய்ந்த
    சீர்மைகளைப் பேசுவதும் உரிமை யாகும்;