கவியரங்கில் முடியரசன் | 117 |
நிந்தனையைக் கைவிட்டு, நிலைமை சொல்லும் நேரத்தில் நடுநின்று, கேட்போர்க் கெல்லாம் புந்தியினில் படும்வகையில் புகல வேண்டும்; புகலுங்கால் நாகாத்தல் உரிமை யாகும்(21) விடுதலைப் போர் தென்றல்தவழ் நாட்டினரே! முரசொ லித்துத் தென்னகத்தைத் திருநாட்டை மீட்ப தற்கு மன்றங்கள் அமைத்திடுவீர்? போர்வாள் ஏந்தும் மாவீரர் படைசேர்ப்பீர்! இனமு ழக்கம் நின்றெங்கும் எழுப்பிடுவீர்! சிறையைக் காட்டின் நிமிர்ந்திருந்து முல்லைமலர்ச் சோலை என்பீர்! கொன்றொழிக்கக் கயிறெடுத்தால் கழுத்தைக் காட்டிக் குலவுமெழில் முத்தாரம் என்று கொள்வீர்!(22) வீரமிகு நம்நாடு பாரில் ஓங்க விடுதலைப்போர் தொடங்கிடுவீர்! உரிமை பெற்றுத் தீரமிகு தனியரசாய் மக்க ளாட்சி செழித்தோங்கச் செய்வதுநும் உரிமை யாகும்; கூரறிவுத் திராவிடன்பால் அடுத்தி ருக்கும் குடிலர்களைச் சகுனிகளை உடன்பி றந்தும் மாறுபடு வீடணரை விழித்தி ருந்து மாற்றிடுவீர்! நம்நாடு வாழ்க நன்றே(23) தலைப்பு:உரிமை இடம்:எழுத்தாளர் மன்றம் - மதுரை நாள்:8-11-1959
தென்றல், முரசொலி, தென்னகம், திருநாடு, மன்றம், போர்வாள், இனமுழக்கம், முல்லை, எழில், முத்தாரம், நம்நாடு, விடுதலை, திராவிடன் என்னும் முன்னேற்ற இதழ்களின் பெயர்கள் அமைந்திருத்தல் காண்க. |