பக்கம் எண் :

120கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

எண்ணில் அடங்கா இளம்வாழை பெற்றதுண்டு
நண்ணி வளர்வாழைத் தோட்டத்துள் நானொருவன்;

வாழையடி வாழையென வந்ததிருக் கூட்டத்துள்
ஏழையேன் நிற்க இடம்தந்த என்தமிழ்த்தாய்

வாழ்கஎன வாழ்த்தி வணங்குகிறேன்; என்குலமும்
வாழ்கஎன வாழ்த்துகிறேன் வாழ்க கனியனைத்தும்;

கவிக்கனி

பாவல்ல வாழை பழுத்தகனி துய்ப்போர்க்கு
நாவெல்லாம் இன்சுவையாம், நாளெல்லாம் நற்சுவையாம்,

சொல்ல இனிக்கும், சுவைக்க இனித்திருக்கும்,
மெல்ல நினைக்க மிகஇனிக்கும், மீண்டினிக்கும்,

கேட்கச் செவியினிக்கும், நாடோறும் கேட்பதற்கு
வேட்கும் படியினிக்கும், வேண்டும் பொழுதினிக்கும்,

இன்றினிக்கும், நாளைக் கினித்திருக்கும், இக்கனியே
என்றும் இனிக்கும்; இதனினிப்புக் கொப்புண்டோ?

உண்ண மிகஇனிக்கும் உண்டால் தெவிட்டாது;
வண்ணம் கனிந்திருக்கும் வாடாது நின்றிருக்கும்;

பாரதி வாழை

பாரதியாம் இவ்வாழை பாக்கனிகள் உண்பிக்கப்
பாரறிய எட்டைப் பதிமண்ணில் தோன்றியது;

மண்ணின் வளத்தால் மறமிக்க காவலரால்
உண்ணுநன் னீரால் உரமோ டுயருங்கால்