பக்கம் எண் :

கவியரங்கில் முடியரசன் 13

ஈங்களிக்க மக்களில்லை என்றேங்கி நின்றான்; பின்
வில்வீரர் சொல்வீரர் வேண்டும் செயல்முடிக்கும்
நல்வீரர் மக்களென நால்வரையும் பெற்றெடுத்தான்
வீரச் செயல்புரியும் வேல்தாங்கும் காளையரின்
தீரப் பணிகண்டு செம்மாந்து வாழ்ந்திருக்கும்
*“வெண்தாடி வேந்தனைப்பார்” என்றவுடன் யாரென்றேன்
“விண்தோய் நகராளும் வேந்தன் தயரதனாம்”
என்றான் அதன்பின் எழில்சேர் மிதிலைநகர்
சென்றேன் அவனோடு சேர்ந்து(5)

எண்சீர் விருத்தம்

சனகன்

வில்வைத்தான் வளைப்பவற்கே சீதை என்றான்;
    வீரர்பலர் பெண்எனலும் ஓடி வந்தார்;
**மல்வைத்த திருநெடுந்தோள் வளைய நெஞ்சும்
    வளைந்ததன்றி வில்வளைய வில்லை அந்தோ!
கல்வைத்த தெனஇதயம் கலங்கி நின்று
    காசினியில் பெண்பெற்றால் துயரே என்ற
சொல்வைத்த முகத்தானைச் சனகன் என்று
    சொல்வானைச் சோர்வானை அங்குக் கண்டோம்(6)

கட்டளைக் கலித்துறை

இராமன்

வேள்வியை ஆக்கிடத் தம்பியும் பின்வர வீரமுடன்
ஆள்வினை முற்றிய ஆடவன் சென்றான் மிதிலைவழி;
தோள்வலி வில்லோன் துணைவிழி கவ்விய மாதரசி
வாள்விழி கண்டனன் வாடினன் சென்றான் வழிநடந்தே(7)

காதல் மடவார் கடைக்கண் விழியினைக் காட்டிவிட்டால்
சாதலும் ஏற்பர் எளிதில் மலையும் தகர்ப்பரென்றே
ஓதலும் உண்மை உயர்பெரு வில்லும் சனகனுள
வேதனை யும்மொடித் தானொரு வீரன் மிதிலையிலே(8)


*வெண்தாடி, தயரதன் முதுமையைக் குறிக்கும்
**மல் - மற்போர்