பக்கம் எண் :

150கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

சுடர்காலுஞ் செங்கதிரை வழிய னுப்பித்
    தொடுவானில் வெண்மதியம் ஆட்சி செய்ய,
மடவார்கள் கொழுநரொடு மாடமுன்றில்
    மலர்தூவு பஞ்சணையிற் சார்ந்து, கொண்டான்
தடமார்பில் புதையுண்டும் புலந்தும் கூடித்
    தண்ணிலவுப் பயன்கொண்டு, மலர்கள் சிந்தக்
கொடிபோல நுடங்கினராய்த் துயிலில் ஆழ்ந்தார்;
    குலமகளாம் கண்ணகியோ துயரில் ஆழ்ந்தாள்.7

தற்கொண்ட காதலனைத் தணியா இன்பந்
    தந்தவனைக் கோவலனைப் பிரிந்து நின்ற
விற்கொண்ட புருவத்தாள் நினைந்த ழுங்கி
    வேதனையில் அழுதழுது சிந்தும் நீரால்
சொற்கொண்ட புகார்ப்பதியின் கடல்நீர் யாவும்
    சுவைமாறி உவர்ப்பாகிப் போயிற் றந்தோ!
இற்கொண்ட அவளிருப்பு நெய்தல் ஆகும்
    இரங்குதலே அவளுரிமைப் பொருளும் ஆகும்.8

கண்ணகியை ஏன்பிரிந்தான்? அவளி டத்துக்
    கண்டகுறை ஒன்றுண்டா? இல்லை இல்லை;
எண்ணரிய செல்வத்தான் வான்நி கர்த்த
    ஈகைவலான் மாநாய்கன் மகளாய் வந்தாள்;
வண்ணமுக மங்கையர்கள் தொழுது போற்ற
    வயங்கியநற் பெருங்குணத்தாள்; வடிவு சொல்ல
மண்ணகத்து நிகரில்லை; காமன் தேவி,
    மண்மகள்என் றிவர்தாமே ஒருசார் ஒப்பர்.9

பொற்கொடியோ பூங்கொம்போ என்ற யிர்க்கப்
    பூத்திருக்கும் நல முடையாள், கொண்டான் சொல்லும்
சொற்படியே நடக்கின்ற மென்கு ணத்தாள்,
    சூதறியாள், அவள்வயதோ ஈரா றாண்டு
பொற்புடைய தெய்வமகள், கற்பின் செல்வி,
    புரையில்லாக் குலக்கொம்பர் இந்த மின்னை
எற்கடியோ பிரிந்திருந்தான் துன்பந் தந்தான்?
    ஈரமிலா நெஞ்சத்தான் செல்வக் கோமான்.10