பக்கம் எண் :

152கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

ஒன்றுதலில் ஞெகிழாமல் அறுக தீதென்
    றுரைமொழியை எதிர்மறையால் மொழிந்து நின்றார்;
அன்றவரே பிரிவுண்மை அறிந்த தாலே
    அவ்வண்ணம் பகர்ந்தனரோ அந்தோ! அந்தோ!14

காதலரைப் பிரிமாதர், பெற்றெ டுத்த
    கனிமழலை மகவுமுகம் நோக்கி நின்று
நோதகவு தணிந்திருப்பர்; பிரிவில் வாடி
    நுடங்குகின்ற கொடியிடையாள் கண்ண கித்தாய்
மேதகுநல் முதுபார்ப்பான் மறையு ணர்த்த
    மேவுமழல் வலஞ்செய்து மணந்து கொண்டும்
காதலெனுங் கடல்மூழ்கி நின்றும் அந்தக்
    கடல்தனிலே முத்தொன்றும் கண்டா ளல்லள்.15

ஆதலினால் பிரிவென்னுங் கொடிய பாவி
    அவட்களித்த பெருந்துயரம் தணிக்கும் ஆற்றை
ஏதொன்றும் அறியாளாய் இரங்கி நெஞ்சை
    இடருக்கே அளித்துவிட்டாள்; கோவ லற்கு
மாதவிபோல் எழுதவிலை முடங்க லொன்றும்
    மனத்தகத்தே குமுறலெலாம் எழுதி வைத்தாள்;
தீதறியா அன்னையிவள் பிரிவுத் துன்பம்
    செப்புதற்கு முயல்வமெனின் இயல்வ தொன்றோ?16

காதலரைப் பிரிந்தமையால் வருந்தும் மாதர்
    கண்சிவந்து வெகுண்டிருப்பார்; அதுத ணிக்கும்
சூதறிந்த ஆடவர்தாம் விருந்தாய் வந்தார்
    துணையுடனே இற்புகுதச் சிவப்பு மாறி
மாதர்விழி கருங்குவளை நிறமே எய்தும்;
    மனக்குறிப்பைக் கருப்புடனே சிவப்புக் காட்டும்;
கோதறியா இவள்விழியோ சிவக்க வில்லை
    கொட்டுகிற புனலோடு கருமை காட்டும்.17