16 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3 |
கண்டிடின் இவரை என்றும் **காழ்ப்பகை தோன்றா” தென்று ***விண்டனன்; பின்னர் நாங்கள் விண்ணினில் பறந்து சென்றோம்(15) எண்சீர் விருத்தம் வாலி மலைமுகட்டில் முகில்தவழும் உயர்கிட் கிந்தை மாநகரில் இறங்கியதும் மனமு டைந்தேன்; கொலைமுகத்த கூரம்பு நெஞ்சந் தன்னில் குருதியினைப் பாயவிட எண்ண மெல்லாம் நிலைமுகத்தால் பேசுகின்றான் வாயுஞ் சோர்ந்தான் நெடுமலைபோல் புரள்கின்றான் வஞ்ச நெஞ்ச வலைமுகத்துள் சிக்குண்டான் போலும் என்று வருந்திஅவன் யாரென்றேன் ‘வாலி’ யென்றான்(16) ஏனிந்த நிலையென்றேன்; “உடன்பி றந்தார் இருவர்க்குள் நேர்ந்தபகை” எனப்பு கன்றான்; வானிகந்த வலியானை எய்தோன் யாவன்? எனவினவ “ஆண்டுளன்பார்” என்று சுட்டக் கானிருந்த மரத்தடியில் வில்லைத் தாங்கி மறைந்திருந்த கரியவனைக் கண்ணாற் கண்டேன்; நானிலத்தில் வீரனென்போன் மறைந்தம் பெய்தல் நல்லதுவோ? வீரத்திற் கிழுக்காம் என்றேன்(17) முறுவலித்தான் அப்புலவன்; விடையே யில்லை; முணுமுணுத்தான் “உடன்பிறப்புள் பிளவி ருந்தால் வருபவர்க்கு நல்விருந்தாம் நமது நாடு; வம்பெதற்கு? வாவா” வென் றெனைய ழைத்தான்;
**காழ்ப்பகை - முற்றிய பகை, ***விண்டனன் - (கம்பன்) சொன்னான் |