பக்கம் எண் :

174கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

சிலம்பின் பெருமை

எங்கிருந்தோ வந்தோர் இசைத்த கதையன்றாம்
இங்கிருந்தோர் வாழ்வை இளங்கோ நமக்களித்தான்;20
இந்நாட்டார் தென்னாட்டார் என்போர் வரலாறே
முன்காட்டி நிற்க முகிழ்த்தபெருங் காப்பியமாம்;
செந்தமிழ் நாட்டுக்கே செப்பும் உரிமைகொள
வந்ததிருக் காப்பியமே வானவன்செய் பொற்சிலம்பு;
ஒன்றன் மொழிபெயர்ப்பு நூலன் றுலகோர்தாம்
நின்று மொழிபெயர்க்கும் நூலாய் நிலைத்ததுகாண்;
கூறுந் தலைமக்கள் கோலேந்தும் வேந்தரலர்
சேருமவ் வேந்தர் சிறுதுணையே செய்திருப்பர்;
வாழுங் குடிமக்கள் வாய்த்ததலை மக்களெனச்
சூழும் படியாச் சொலும்புரட்சிக் காப்பியமே;30

முத்தமிழ்க்காப்பியம்

போற்றும் இயற்றமிழிற் பூத்துப் பலவகையில்
ஏற்றமுறும் பாவகைகள் ஏந்தும் இயல்பதனால்,
கேட்டார்ப் பிணித்துக் கிளர்ச்சிகொளச் செய்கின்ற
பாட்டாம் இசைத்தமிழின் பாற்பட் டியங்கிவரும்
ஊசல் வரிமுதலா ஓதும் வரிப்பாட்டும்
பேசுங் குரவைகளும் பேணி இசைப்பதனால்,
கூத்துக் குரியதாக் கூறும் உரைப்பாட்டும்
பாத்தொகையி னூடே பரிந்து நடமிடலால்
முத்தமிழின் காப்பியமாய் முன்னோர் புகழ்ந்துரைக்கும்
வித்தகஞ்சேர் நூலாய் விளங்குவது நம்சிலம்பே;40

தொன்மை வனப்பு

செய்யுள் தொடர்நிலைக்குச் செப்பும் வனப்பெட்டென்
றையன்தொல் காப்பியன் ஆக்கிப் படைத்தளித்தான்;
சொன்னவகை எட்டனுள்ளும் தொன்மை ஒருவனப்பாம்;
அன்னவனப் பொன்றுக் கணிகலனாக் கொண்டிங்குச்
சேரன் சிலம்பினையுஞ் சேர்த்து மொழிகவெனக்
கூறிய நச்சருரை யாரும் உணர்வார்கள்;