நீதிநூல் ஆராய்ந்து பாராமல் அல்லல் செயுமரசு சீரோய்ந்து போயொழியச் செய்யும் உயரறமே; சொற்காத்துத் தற்காத்துச் சோர்வின்றி நன்னெறியால் இற்காக்குங் கற்புடைய ஏந்திழையைப் பார்போற்றும்;50 சூழ்மதியால் மற்றொன்று சூழினும் முந்துருத் தூழ்வினைதான் வந்தே உறுபயனை ஊட்டிவிடும்; இம்மூன்று நீதி எடுத்துணர்த்தத் தோன்றியநூல் அம்மா பெருந்துறவி ஆக்கும் ஒருநூலே; நாட்டியல் நூல் கூத்தும் இசையுங் குறிக்கும் இயல்பனைத்தும் பாத்துப் பகர்ந்தணிசேர் பாவில் அரங்கேற்றும்; அன்பின் விளைந்த அகப்பொருளின் நற்றுறைகள் இன்பில் அமைந்தங் கிடையிடையே கொஞ்சிவரும்; அஞ்சலிலாப் போர்முறைக் காகும் புறத்துறைகள் எஞ்சலிலா தெங்கும் எழிலுடனே ஆர்ப்பரிக்கும்;60 நாட்டுவளஞ் சொல்லி நகரின் நலமுரைத்துக் காட்டும் பொழுதுநகர்க் கண்ணுறையும் பல்வேறு மக்களெலாம் வாழும் வகைமுழுதுஞ் சித்திரித்துத் தக்கவணம் பாடிக் குடியிருப்புத் தந்திருக்கும்; ஒன்பான் மணிபற்றி ஓதும் இயல்புக்குத் தன்பால் இடந்தந்து சாயா ஒளிநல்கும்; குன்றினிடைச் சேர்பொருள்கள் கூடிக் குவிந்திருக்கும் முன்றில்தனை அங்கே முழுமைபெறக் காட்டிநிற்கும்; அஞ்சு நிலவகைகள், அங்கே நிகழ்திருநாள், கொஞ்சும் இசை, கூத்துக் கோலமுடன் கூறிவரும்;70 தன்னினத்தைப் புன்மொழியால் தாக்கி யிகழ்மொழிகள் சொன்னவர்மேற் போர்தொடுத்துச் சூடும் பெருவாகை; இவ்வண்ணந் தென்னாட் டியல்புமதன் பண்பாடும் செவ்வண்ணங் கூறுஞ் சிலம்பென்னும் நன்னூலே; |