பக்கம் எண் :

தமிழ் முழக்கம்175

நீதிநூல்

ஆராய்ந்து பாராமல் அல்லல் செயுமரசு
சீரோய்ந்து போயொழியச் செய்யும் உயரறமே;
சொற்காத்துத் தற்காத்துச் சோர்வின்றி நன்னெறியால்
இற்காக்குங் கற்புடைய ஏந்திழையைப் பார்போற்றும்;50
சூழ்மதியால் மற்றொன்று சூழினும் முந்துருத்
தூழ்வினைதான் வந்தே உறுபயனை ஊட்டிவிடும்;
இம்மூன்று நீதி எடுத்துணர்த்தத் தோன்றியநூல்
அம்மா பெருந்துறவி ஆக்கும் ஒருநூலே;

நாட்டியல் நூல்

கூத்தும் இசையுங் குறிக்கும் இயல்பனைத்தும்
பாத்துப் பகர்ந்தணிசேர் பாவில் அரங்கேற்றும்;
அன்பின் விளைந்த அகப்பொருளின் நற்றுறைகள்
இன்பில் அமைந்தங் கிடையிடையே கொஞ்சிவரும்;
அஞ்சலிலாப் போர்முறைக் காகும் புறத்துறைகள்
எஞ்சலிலா தெங்கும் எழிலுடனே ஆர்ப்பரிக்கும்;60
நாட்டுவளஞ் சொல்லி நகரின் நலமுரைத்துக்
காட்டும் பொழுதுநகர்க் கண்ணுறையும் பல்வேறு
மக்களெலாம் வாழும் வகைமுழுதுஞ் சித்திரித்துத்
தக்கவணம் பாடிக் குடியிருப்புத் தந்திருக்கும்;
ஒன்பான் மணிபற்றி ஓதும் இயல்புக்குத்
தன்பால் இடந்தந்து சாயா ஒளிநல்கும்;
குன்றினிடைச் சேர்பொருள்கள் கூடிக் குவிந்திருக்கும்
முன்றில்தனை அங்கே முழுமைபெறக் காட்டிநிற்கும்;
அஞ்சு நிலவகைகள், அங்கே நிகழ்திருநாள்,
கொஞ்சும் இசை, கூத்துக் கோலமுடன் கூறிவரும்;70
தன்னினத்தைப் புன்மொழியால் தாக்கி யிகழ்மொழிகள்
சொன்னவர்மேற் போர்தொடுத்துச் சூடும் பெருவாகை;
இவ்வண்ணந் தென்னாட் டியல்புமதன் பண்பாடும்
செவ்வண்ணங் கூறுஞ் சிலம்பென்னும் நன்னூலே;