பக்கம் எண் :

176கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

பெயர்க்காரணம்

செம்பொற் சிலம்பால் சிறந்து விளங்குவதால்
நம்புஞ் சிலப்பதி காரப்பேர் நண்ணுமென்றே
செந்தமிழ்க்கோர் ஆரமெனச் செப்புந் திருநூற்கு
வந்தபெயர்க் காரணத்தை வல்லார் நவின்றிடுவர்;
கோப்பெருந் தேவி, குளிர்முத்தை உள்ளிட்டு
யாப்பமைத்துக் காலில் அணிந்த சிலம்பொன்றாம்;80
கண்ணகி நல்லாள்தன் காலில் அணிந்திருந்த
பண்ணுறுநல் மாணிக்கப் பைம்பொற் சிலம்பொன்றாம்;
எந்தச் சிலம்பால் எழிற்பெயரைப் பெற்றதென
வந்ததோர் ஐயம் வளர்ந்து வளர்ந்துவரச்
சிந்தை கலங்கித் தெளிவின்றி நானிருந்தேன்;
முந்தை மொழிப்புலவன் முன்னேற்றப் பாவேந்தன்
எந்தைக்குத் தந்தைஎனும் என்பாட்டன் பாரதிதன்
தந்தஒரு பாடல் தரும்விளக்கம் கண்டுணர்ந்தேன்;
தேருஞ் சிலப்பதி காரமென் றோர்மணி*
ஆரம் படைத்ததமிழ் நாடென் றடிபடைத்தான்90
அந்த மணிமொழியால் அன்னை மணிச்சிலம்பே
தந்தபெயர் ஈதென்று சிந்தை தெளிந்திருந்தேன்;

பெண்மை பேணும் நூல்

மங்கல வாழ்த்து மகிழ்ந்துரைத்த பேராசான்
திங்களை முன்போற்றிச் செய்யகதிர் ஞாயிற்றைப்
பின்போற்றிச் செல்கின்ற பெற்றிமையை நாம்சுவைப்போம்;
பெண்போற்றும் காரணத்தால் பேசுகிறார் இவ்வண்ணம்;
கண்ணகியுங் கோவலனுங் காதல் மணங்கொண்டு
பண்ணமைந்த கட்டில் பயில்கின்ற காலைஅக்
காட்சி கதிர்ஒருங்கு காண இருந்ததுபோல்


*மணி - மாணிக்கம்.