மாட்சி பெறவிளங்க வாய்ந்த தெனமொழிந்தார்;100 கண்டஇரு காதலர்க்கும் காட்டாம் கதிரிரண்டும் கொண்ட குறிப்புணர்ந்தோம்; கோச்சேரன் காப்பியத்துள் தன்னே ரிலாத தலைமைபெறும் பேருரிமை மின்னேர் இடையாட்கே மேவுவதும் நாமறிவோம்; ஆதலினால் காவியத்தில் ஆட்சிசெயும் பெண்பாலாம் மாதவட்கு முன்னே மதிப்பளிக்க எண்ணியவர் திங்களைமுன் போற்றுகிறார் திங்களுமோர் பெண்பாலென் றெங்கும் இலக்கியத்தே ஏத்துவதும் உண்டன்றோ? மங்கல வாழ்த்து பூம்புகார் தென்மதுரை பொற்புமிகும் வஞ்சியென ஆம்முறையால் காண்டம் அமைத்து நிரல்செய்து110 சோழனுக்கும் பாண்டியற்கும் சொல்லுமெழிற் சேரனுக்கும் வாழஇடந் தந்து வகைசெய்தார் ஒவ்வொன்றில்; மாவளத்தான் வெண்குடைக்கு வட்டவுருத் திங்களையும் பூவளர்க்கும் ஆணைக்குப் பொன்செய் பகலனையும் காவிரியின் தண்ணளிக்குக் காரினையும் ஒப்புரைத்து நாவுயரப் போற்றி நகரின் நலம்போற்றி மங்கல வாழ்த்தாக வாழ்த்தி முதன்முதல் அங்கம் பெறும்புகார்க் காண்டத்துள் ஆக்கிவைத்தார்; மாமுடிகள் தாங்கிவரும் மாமன்னர் மூவர்க்கும் ஆமுரிய நீள்கதையை ஆக்கும் பெருமகனார்120 கோடுயர்ந்த ஞாலத்தின் கோவடிகள் அன்னவர்தாம் கோடுதல் இல்லாமல் *கோல்முனைபோல் நேர்நின்று மூவர்க்கும் ஓர்நிகரில் யாவர்க்கும் ஏல்வகையில் காவியத்துட் பாடல் கடனாகும்; ஈதுணர்ந்தும் பாண்டியற்குஞ் சேரனுக்கும் பாடுமொரு மங்கலமாம்
*கோல் - தராசு. |