பக்கம் எண் :

தமிழ் முழக்கம்187

இந்தநிலை கண்டுணர்தல் இன்றைக்குத் தேவையடா;
செஞ்சிக்கோன் தந்த செழுங்கோட்டை மாட்சியிது;
வஞ்சிக்கோன் தம்பிமுதல் வார்த்தெடுத்த காப்பியங்கள்80
ஐந்து மகவாக ஆங்கே அருகிருக்க
மைந்துடன்நான் நிற்கின்ற மாண்புயர்ந்த காட்சியிது;
ஆறுபடை வீடெழுப்பி ஆங்கருகில் நக்கீரன்
வீறுபெற நிற்கும் விறல்மிகுந்த காட்சியைப்பார்;
பாவை நலம்பாடிப் பள்ளிகொளும் ஆரணங்கைப்
பாவை துயிலெழுப்பும் பாங்கினையும் ஈங்கேகாண்;
மாமல்லைக் காட்சி, மனுநீதிச் சோழனொடு
பூமுல்லை தேர்பெற்ற பொற்பினையும் காணுகநீ;
பாரெல்லாம் என்பெயரைப் பாடிப் புகழ்ந்தேத்தச்
சீரெல்லாஞ் செய்துவரும் செம்மை யுளத்தானாம்90
உன்னண்ணன் நல்லெண்ணம் ஓங்கிவரும் நல்லண்ணன்
என்கண்ணன் ஆங்கே எழிலுடனே நிற்கின்ற
தோற்றத்தைக் காட்டுகிற தூய சிலையுருவின்
ஏற்றத்தைக் கண்டுமகிழ்’ என்றாள் தமிழன்னை;
ஊர்வலத்தைக் கண்டேன் உணர்ச்சி வயப்பட்டேன்
பேருளத்தில் இன்பமிகப் பெற்று.

உலகத்தமிழ் மாநாடு

சென்னை

6.1.1968


அண்ணன் - பேரறிஞர் அண்ணா.