பக்கம் எண் :

188கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

12. நெல்லின் கதை

கலிவெண்பா

ஆண்டவற்கோர் ஆயிரம்பேர் ஆமென்பர்; நெல்லெனும்பேர்
பூண்டிருக்கும் என்றனுக்கும் பூட்டுந் திருநாமம்
எண்ணி லடங்காதிங் கேடெடுத்தாற் போதாது;
மண்ணிற் பெருகிவரும் மாண்பினைநான் கூறுகிறேன்;
சீரகத்துச் சம்பா சிறுமணிநல் சித்தடியான்
ஊரகத்தார் போற்றுகிற உய்யக்கொண் டானென்பர்;
அம்பா சமுத்திரம் ஆலைமிகு கோவைதருஞ்
சம்பா எனஎன்னைச் சாற்றிப் புகழ்வதுண்டு;
கார்த்திகைச் சம்பா கருடன்சம் பாவென்று
நேர்த்தியுடன் என்னை நினைப்பவரும் உண்டு;10
குதிரைவால் நல்யானைக் கொம்பனுடன் தங்கம்
புதுவகைய மல்லிகை போகிணி கிச்சடி
கைவிரைச் சம்பாவாய்க் காட்சி யளிப்பதுண்டு;
செய்விளையும் என்றனுக்குச் செப்பும்பேர் இன்னுமுண்டு;
முத்துவெள்ளை கட்டைவெள்ளை மொய்க்குங் கொடிவெள்ளை
சித்திரைக்கார் வெள்ளைக்கார் செப்பும் மணல்வாரி
பூங்கார் கருங்குறுவை பூம்பாளைப் பேரெல்லாம்
ஈங்கே எடுத்துரைத்தால் ஏதேது நேரமையா?
கூறும் மிளகியிலே கூடும் பெயர்களெல்லாம்
யாரும் அறிவாரே! அத்தனையும் போதாவென்20
றாங்கிலப்பேர் சொல்லி அழைப்பதையுங் கேட்டிருப்பீர்
ஈங்கெனக்கு நேர்சொல்ல யாரே இருக்கின்றார்?
பார்மிகுத்த மாந்தர் பசிநீக்கும் எண்ணத்தால்
சீர்திருத்தம் என்னைப்போற் செய்தவரார் இங்கே?