பக்கம் எண் :

தமிழ் முழக்கம்189

கடல்கடந்து நானோர் கலப்புமணஞ் செய்தே
இடர்களைய வந்துள்ளேன்; எல்லாரும் போற்றிஎனை
ஆடுதுறை என்றே அழைப்பதையுங் கேட்டிருப்பீர்;
நீடுபுகழ் கொண்டஇந்த நெல்லுக்கு நேருண்டோ?
நாடோறும் வானொலியார் நத்திப் புகழ்ந்தென்னைப்
பாடாத நாளுண்டா? பத்தியுடன் என்பெயரைச்30
சொல்லாத நாளுண்டா? வேளாண்மைத் தோத்திரங்கள்
இல்லாத நாளுண்டா? என்னருமைத் தொண்டரவர்;
செல்வ வளமிக்க சீமான் எனைப்போலப்
பல்வகைய ஊர்தி படைத்தவரார் இவ்வுலகில்?
பேருந்து வண்டிகளில் பெட்புடன்நான் செல்வதுண்டு,
நீருண்ட மேகமென நீள்புகையைக் கக்கும்
தொடர்வண்டி ஏறித் தொடர்வதுண்டு; நீரில்
படர்வதெனில் நல்ல படகுண்டு கப்பலுண்டு,
காட்டுவழிச் செல்வதெனில் மாட்டுவண்டி ஏறிடுவேன்,
மேட்டுக் குடியார்போல் வேற்றுமைகள் பாராட்டேன்;40
ஏந்திவர ஊர்திகள் நான் எத்தனையோ பெற்றிருந்தும்
மாந்தர் தலைகூட வாகனமாக் கொள்வதுண்டு;
நொந்திருக்கும் நோயொன்று வந்துவிடின் வான்பறந்து
வந்தெனக்குச் செய்யும் மருத்துவங்கள் எத்தனையோ!
நாடாள வந்ததொரு நல்வேந்தன் நானென்றால்
கூடா தெனமறுத்துக் கூறிடுவார் யாருமில்லை;
தஞ்சைத் தரணியிற்றான் என்றன் தனியாட்சி
நஞ்சைப் புலமெல்லாம் நல்லாட்சி செய்திடுவேன்;
காராளர் வந்தாடிப் பட்டமெனைச் சூட்டிடுவார்
ஊராளும் நல்லமைச்சர் உண்டு துணையாக;50
நானாளும் நன்னிலத்தை நச்சாக்க நல்லவரைப்
போல்நாளும் வந்துபுகின் பொங்கிக் களையெடுப்பேன்;
எல்லைஎன்று முள்வேலி இட்டே எனதுநிலம்
தொல்லைஒன்றுங் காணாமல் தொன்றுமுதல் காத்திருப்பேன்;
பொன்னகரைச் சுற்றிப் புறமதில்கள் வேண்டுமன்றோ?
முன்வளைத்த நால்வரப்பும் மொய்ம்புடைய கோட்டைகளாம்;