பக்கம் எண் :

194கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

ஏடந்த மரந்தந்த பிச்சை யன்றோ?
    எழுத்துணர்த்தும் ஆசானும் வாழ்ந்த சிற்றில்
ஓடறிந்த துண்டோ அம் மரமே தந்த
    ஓலைகளே மேற்பரப்பை அழகு செய்யும்.3

கல்லடிகள் பட்டாலும், தலையில் ஏறிக்
    காலடிகள் வைத்தாலும், கழிகள் கொண்டு
வல்லமையின் எறிந்தாலும் பொறுமை மேவி,
    வாய்திறந்து பேசாமல் கனிகள் நல்கி
நல்லபயன் செய்துவரும் மரங்க ளெல்லாம்
    நாட்டுக்கோர் நீதிதனை நவின்று நிற்கும்;
செல்வமிகப் பெற்றவர்கள் மற்ற வர்க்குஞ்
    செய்திடுக ஒப்புரவென்று றுணர்த்திக் காட்டும்.4

வேர்கொடுக்கும், பால்கொடுக்கும், வெட்டு வோர்க்கு
    மேற்பட்டை கொடுத்திருக்கும், பற்றும் நோயின்
வேர்கொடுக்கக் காய்கொடுக்கும், பூக்கொ டுக்கும்
    விளைந்துவருங் கனிகொடுக்கும், இலைகொ டுக்கும்;
‘ஆர்கொடுக்க வல்லார்கள் என்னைப் போ’லென்
    றருமருந்து மரமொன்று நிமிர்ந்தி ருக்கும்;
பேர்படைத்த செல்வரெலாம் பிறரும் வாழப்
    பெருந்துன்பம் உறும்போதும் வழங்கச் சொல்லும்.5

படரஒரு வழியின்றி மயங்கி நிற்கும்
    பைங்கொடிகள் தழுவுதற்கும் இடங்கொ டுக்கும்;
படபடனெச் சிறகடித்துப் பறந்து சுற்றும்
    பறவையினந் தங்குதற்குங் கைகொ டுக்கும்;
உடலினையும் சிலபறவை ஓட்டை செய்தே
    உறைவிடமாக் கொண்டிருக்க உவந்த ளிக்கும்;
மடமடனெச் சாய்கின்ற நிலைவந் தாலும்
    மங்கையர்கள் அடுப்பெரிக்க விறகு நல்கும்.6