பக்கம் எண் :

196கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

இரங்காமல் நிற்கின்ற குணமும் உண்டாம்.
    ஈடில்லாச் செல்வவளம் பெற்றி ருந்தும்
உறங்காமல் காத்திருக்குங் கஞ்சன் போல
    ஒருகனியும் உதவாத எட்டி யுண்டு.10

தோன்றிவரும் நாள்தொட்டு மடியுங் காறும்
    துணைசெய்யும்; மடிந்தபினும் பயனேநல்கும்;
ஊன்றிவளர் வேர்முதலாத் தன்பா லுள்ள
    உறுப்பெல்லாங் கொடுத்துதவும்; உயிரும் ஈயும்;
மான்திரியுங் காட்டகத்தும் மாந்தர் வாழும்
    நாட்டகத்தும் மதில்சூழும் வீட்ட கத்தும்
வான்தடவித் தலைவிரித்து நிமிர்ந்து நிற்கும்;
    வாழ்வெல்லாம் பிறருக்கே ஆக்கி நிற்கும்.11

பேசுமொழி கண்டறியா முன்னர் மாந்தர்
    பெருங்கிளையிற் பரணமைத்து வாழ்ந்த துண்டு;
வீசுபுயல் வேகத்துப் புரவி யோடு
    வினைமிக்க தேர்ப்படையும் வேந்தன் றானும்
காசுபண மில்லாமல் தங்கு தற்குக்
    காற்றுநிழல் அத்தனையும் தந்தி ருக்கும்;
மூசுபுகழ் மூவேந்தர் தலையிற் சூடும்
    மும்மலரும் தந்ததெது? மரமே யன்றோ?12

கொஞ்சுமொழிச் செல்வத்தைத், தன்னை ஏற்றுக்
    கொண்டவளைப் பஞ்சணையில் தனிக்க விட்டு,
மஞ்சுதவழ் வான்மாடங் கொண்டி லங்கும்
    மாமனையை நீத்தகன்று, செல்வ வாழ்வோ
*தஞ்சமெனத் துறந்தோடி, நாட்டு மக்கள்
    தவிப்பகற்றத் துயர்துடைக்க வழியைத் தேடி,
அஞ்சுபொறி காத்தவனாம் புத்தன் வந்தான்
    அரசமரத் தடியில்தான் ஞானம் பெற்றான்.13