198 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3 |
14. கம்ப நாட்டில்... எண்சீர் விருத்தம் கம்பனைஓர் ‘சக்ரவர்த்தி’ என்று சொன்னார் கனன்றெழுந்தேன் முடியரசன் ஆன தாலே; வெம்பியெழுந் தார்ப்பரித்தேன்; தோள்கள் தட்டி வீரரெலாம் வருகவெனக் கூவி நின்றேன்; தெம்புடைய என்மறவர் போர்வி ருப்பால் தினவெடுத்த திண்டோளர் திரண்டு வந்தார்; நம்பியவர் துணையாக என்றன் வீரம் நாட்டுதற்குப் படையெடுத்தேன் கம்பன் நாட்டில்.1 கனன்றெழுந்து படையெடுத்த என்முன் கோட்டைக் கதவடைக்க வில்லை அதைத் திறந்தே வைத்தான்; முனைந்தெழுந்து காவல்செயும் வீரர் இல்லை; முற்றுகையைத் தடுக்கின்ற படையு மில்லை; சினந்தெழுந்த என்னுடன்போர் செய்ய அஞ்சிச் செயலற்று நின்றனனோ கம்பன் என்று நினைந்தெனது படைதொடர உட்பு குந்தேன் நிறைந்தொளிரும் அமைதியையே அங்குக் கண்டேன். 2 உருவியவாள் உறையகத்தே உறங்க வைத்தேன்; உளத்தடத்தில் பொங்கிவரும் உணர்ச்சி ஒன்று மருவியதால் இனமறியா மகிழ்ச்சி கொண்டு மன்னனவன் அரசிருக்கும் மன்றஞ் சென்றேன்; பெருகியதோர் அறிவொளியைத் தேக்கி வைத்த பெருவிழியன் விரிநுதலன் என்னை நோக்கி, ‘அருகினில்வா என்மகனே’ என்று கூறி, அகங்குளிர இருகையும் நீட்டி நின்றான்.3 |