பக்கம் எண் :

200கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

செயிரின்றி இயல்பினிலே ஒருமைப் பாடு
    செழித்துயரச் செய்கின்ற கோன்மை கண்டேன்;
கயலொன்றும் விழிமடவார் கற்பைக் காக்கும்
    கருத்தேபோல் நிலங்காக்குங் கோன்மை கண்டேன்.7

கலைதெரியும் மண்டபங்கள் அங்குக் கண்டேன்
    கல்லெறியும் மண்டபங்கள் அங்கே இல்லை;
விலையறியாக் கல்விதனை விரும்பிக் கற்று
    வீறுபெறும் மாணாக்கர் குழுவைக் கண்டேன்;
நிலையறிய மாட்டாமல் மயங்கி, வேலை
    நிறுத்தங்கள் செய்வோரைக் கண்டே னல்லேன்;
அலைதவழும் கடலொலிபோல் ஆர்ப்பா ரில்லை
    அமைதியுடன் சுவடிகளே பார்ப்பா ருண்டு.8

காசுபணம் தந்துகலைப் பட்டம் வாங்கும்
    காளையரை அந்நாட்டில் எங்குங் காணேன்;
ஆசிரியச் செய்கின்ற கடமை பூண்டும்
    அன்பளிப்புத் தொகையாகப் பொருள்கள் பெற்று,
மாசுபடத் தேர்வெழுதி வந்த பேர்க்கும்
    மதிப்பெண்கள் வழங்குகிற கயமை இல்லை;
ஆசிரியர் மாணவர்க்குள் பகையும் இல்லை
    அப்பன்மகன் எனமதிக்கும் உறவே கண்டேன்.9

பயிலவரும் மாணவர்கள் தெளிந்து தேரப்
    பயிற்றுமொழி எந்தமொழி என்று கேட்கும்
*மயலறிவும் சொற்போரும் அங்கே இல்லை;
    மதியுடையார் செந்தமிழே மொழியக் கேட்டேன்;
வயிறுவளர்ப் பொன்றனையே குறியாக் கொண்டு
    வழங்குகிற கல்வியினை அங்குக் காணேன்;
உயரறிவு வளர்ச்சிக்கே உதவுங் கல்வி
    உணர்த்துகிற மேன்மைதனை அங்குக் கண்டேன்.10


*மயலறிவு - மயக்கத்தை உடைய அறிவு