பக்கம் எண் :

தமிழ் முழக்கம்201

கந்தனுக்கே நிகராய இளைஞர் எல்லாம்
    கலைபலவுந் தெரிகின்ற கழகங் கண்டேன்;
சந்தனத்து *நகில்மடவார் சதங்கை கட்டிச்
    சதிதவறா தாடிவரும் அரங்கங் கண்டேன்;
பந்தடித்துப் பயில்கலையும் மற்று முள்ள
    பன்னரிய நுண்கலையும் தேர்ந்து வல்லோர்
வந்திருக்கும் இடம்பலவுங் கண்டு கண்டு
    வளர்கலைகள் மிகுநாட்டை வாழ்த்தி நின்றேன்.11

குழலிசையும் யாழிசையும் எழுப்பும் ஓசை
    குயிலிசையை வண்டிசையை விஞ்சி நிற்கும்;
முழவுவகைத் தோற்கருவி தனித்தும் சேர்ந்தும்
    முழங்குகிற பேரொலிகள் இடியை விஞ்சும்;
பழகுமவர் மிடற்றெழுந்த பாடல் தந்த
    பண்ணெல்லாம் தெளிதேனை விஞ்சி நிற்கும்;
அழகொழுகும் இடைமடவார் அரங்கம் ஏறி
    ஆடுகின்ற எழில்கண்டு மயில்கள் சோரும்.12

கலையுடுத்துக் குழலிசைக்கத் தாளங் காத்துக்
    கைவழியே விழிசெலுத்தும் நடனங் கண்டேன்;
கலைவிடுத்துக் குழல்விரித்து மானம் விட்டுக்
    காசொன்றே குறியென்று பிறந்த மேனி
நிலைபடைத்துச் சூடுண்ட மண்பு ழுப்போல்
    நெளிந்துகுதித் தாடுகின்ற பேய்கள் இல்லை;
நிலைகெடுத்த கலைகெடுத்த பரணிப் பேய்கள்
    நெளிவினுக்குக் கலையின்பேர் சூட்ட வில்லை.13

பண்ணுடனே திறமனைத்தும் உணர்ந்த வல்லோர்
    பாட்டரங்கில் தமிழிசையே முழங்கக் கேட்டேன்;
*கண்ணறவக் களிப்பினிலும் பாணர் தம்வாய்
    கன்னிமொழித் தமிழிசையே பாடக் கேட்டேன்;


*நகில் - கொங்கை *கண்ணறவம் - கள்நறவம்