பக்கம் எண் :

கவியரங்கில் முடியரசன் 21

பசிவருத்தக் குமணன்பால் பரிசில் கேட்கும்
    பாவலனோர் களிற்றின்மேல் மன்னர் நாணி
ஒசிதரநான் **செம்மாந்து செலவி ழைந்தே
    உன்பாலுற் றேனென்றான்; அஞ்சி யின்பால்
***நசையின்றிப் பொருளீயின் பெறுதல் ஏலேன்
    நான்பரிசில் ¶வணிகனலேன் என்றான்; மற்றோன்,
பசியுறினும் அரசன்போற் செம்மல்‡ உண்டு
    பாவலர்க்கும் என்றான்; தன் மான எண்ணம்(6)

உயர் எண்ணங்கள்

என்னாட்டிற் பிறர்க்கடிமை செய்யேன், ஏய்ப்போர்க்
    கிடமில்லை, செல்வத்தைக் கொள்ளை கொண்டு
தின்பார்க்கும் இடம்ஈயேன் என்றெ ழுந்தார்,
    திமிர்அரசு கொடுஞ்சிறைக்குள் அடைத்தும் அஞ்சார்,
பின்னீர்க்கும் தீண்டாமை ஒழிக என்றார்,
    பிளவுதரும் மதவெறியை ஒழிக்கக் காந்தி
தன்னாட்டு மதவெறியன் குண்டு தாங்கிச்
    சாய்ந்ததொரு செயற்கரிய தியாக எண்ணம்(7)

*வெள்ளத்தால் வீடிழந்து பொருளி ழந்து
    வெந்துழலும் மாந்தருக்குத் துன்பம் போக்க
மெள்ளத்தான் ஓரறிக்கை விடுத்து விட்டு
    மெத்தையின்மேற் புரளாமல் மனம்ப தைத்துத்
துள்ளித்தான் பறந்தோடி நடந்து நீந்தித்
    துயருற்றுக் கண்கலங்கித் தொண்டு செய்தார்
உள்ளத்தாற் பெருமனிதர் காம ராசர்
    உயரமைச்சர் மக்களைத்தாம் காக்கும் எண்ணம்(8)


**செம்மாந்து - பெருமிதங்கொண்டு, ***நசை - விருப்பம் களிற்றின் மேல் செம்மாந்து செலவிழைந்தவரும் பரிசில் ¶வாணிகன், அல்லேன் என்றவரும் பெருஞ்சித்திரனார்
‡அரசன் போற்செம்மல் உண்டு என்றவர் கோவூர் கிழார் செம்மல் - பெருமிதம்
*அப்போதைய இராமநாதபுர மாவட்டத்தில் புயலடித்த பொழுது முதலமைச்சராக இருந்த காமராசர் நேரிற் சென்று உதவியதை இப்பாடல் குறிக்கிறது.