பக்கம் எண் :

218கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

18. அண்ணல் நடந்த அடிச்சுவடு

கலிவெண்பா

பெற்றெடுத்த தாய்நாட்டைப் பேணி வளர்க்கின்ற
பற்றுளத்தை விட்டுப் பதராக வாழ்ந்திருந்தோம்;
வாணிகத்தால் நம்நாட்டில் வந்து புகுந்தவர்கள்
கூனுளத்து வஞ்சகர்தம் கூட்டுறவால் ஏமாற்றி
நாட்டைப் பறித்தார்கள் நாமடிமை ஆகிநின்றோம்;
கேட்டை உணராமல் கீழடிமை செய்துவந்தோம்;
தாயகத்துச் செல்வமெலாம் தம்முடைமை யாக்கி அவர்
போயவற்றால் வாழ்வைப் புதுக்கி மகிழ்ந்தார்கள்;
எல்லா வளமிருந்தும் எழையராய் நாமிருந்தோம்;
பொல்லா வறுமையினால் பொன்றிக் கிடந்துழன்றோம்;10
தாய்நாட்டு மண்ணில் தலைநிமிர்ந்து வாழாமல்
சேய்நாட்டார் காலடியிற் சிக்கித் தவித்தடிமை
செய்து மகிழ்ந்திருந்தோம் சிந்தனையும் அற்றிருந்தோம்;
கைதி எனவாழ்ந்து காலங் கழித்துவந்தோம்;
நாட்டுக் குரியவர்யார்? நாம்யார்? எனவறியோம்;
கூட்டுப் பறவையெனக் கொத்தடிமை ஆகியதால்
நல்ல நினைவிழந்து, நாகரிகப் பண்பிழந்து,
செல்லும் நெறிதிரிந்து, சீர்மை மிகவிழந்து,
கண்கள் இரண்டிருந்தும் காணாக் குருடர்களாய்,
நண்ணும் செவியிருந்தும் நல்லொலிகள் கேளாராய்,20