பக்கம் எண் :

தமிழ் முழக்கம்219

வாயிருந்தும் ஊமையராய் வாழ்ந்திருந்தோம்; பெற்றெடுத்த
தாயிருந்தும் பிள்ளை தவிப்பதுபோல் நாமுழன்றோம்;
நாட்டுரிமை என்னும் நலமுணர மாட்டாமல்
ஆட்டுகிற வாறெல்லாம் ஆடித் தொழும்புசெய
நத்தித் திரிந்தோம்; நல்லறிவு தோன்றாமல்
பித்துப் பிடித்தவர்போல் பேதுற்றுக் கெட்டலைந்தோம்;
கும்பிட்டுக் கைகட்டிக் கூடார்பின் சென்றொழுகிக்
கும்பி வளர்ப்பதுவே கொள்கைஎன வாழ்ந்தோம்;
அறியாமைப் பேரிருளில் ஆழ்ந்ததனால் ஒன்றும்
புரியாமல் நின்று புலம்பி அலமந்தோம்;30
அல்லல் பொறுக்காமல் ஆர்த்தெழுந்த நெஞ்சங்கள்
அல்லும் பகலும் அயர்வின்றிச் சிந்தித்துச்
‘சொந்த நிலந்தன்னைச் சூதருக்கோ விட்டுவிட
இந்த உடலெடுத்தோம்? ஏனிந்த வெங்கொடுமை?
கொத்தடிமை சாயாதோ? கோல்கொண்டார் செய்கொடுமை
அத்தனையும் மாயாதோ? ஆண்மை பிறவாதோ?’
என்று மயங்கி இடருற்று மாழ்குங்கால்
ஒன்று விடிவெள்ளி ஓர்பால் மலர்ந்ததுகாண்;
போர்வீரர் செய்த புரட்சி எனும்வெள்ளி
பார்மீது தோன்றிப் பரவிச் சுடர்காட்ட,40
எங்கும் உரிமைஒளி ஏறிப் படர்ந்ததனால்
இங்கு விடிவுவரும் என்னும் நிலைகண்டோம்;
போர்பந்தர் என்னுமொரு பொற்புடைய பேர்தாங்கும்
ஊர்தந்த ஞாயிறென ஓர்மகன் தோன்றினன்காண்;
ஞாயிற்றின் தோற்றத்தால் ஞாலம் மலர்ச்சிபெறப்
போயிற் றடிமைஎனும் பொல்லா இருட்கூட்டம்;
தூக்கம் கலைந்தொழியத் துள்ளிக் குதித்தெழுந்தோம்;
ஏக்கம் அகன்றோட இன்பம் மிகப்பெற்றோம்;