நண்ணார் தமக்கும் நலமே செயநடந்தார், இன்னா தனசெய்யா தென்றும் நடந்துவந்தார், ஒன்னார் மனமும் உருகும் படிநடந்தார்,140 அஞ்சாமை என்னும் அரிய வழிநடந்தார், எஞ்சா விடுதலைக்கே எப்பொழு தும்நடந்தார்; அண்ணல் நடந்த அடிச்சுவட்டில் நாம்நடக்க எண்ணி முனைந்தோமோ? எங்கோ நடந்துவிட்டோம்; நாட்டை மறந்தோம் நமையே நாம்நினைந்தோம்; கேட்டைப் பெருக்கினோம் கீழ்மைச் செயல்புரிந்தோம்; நாட்டை வளமாக்கும் நல்ல தொழிலாளர் பாட்டை மதித்தோமா? பாட்டாளி வாழ்வுயர ஏட்டில் எழுதிவிட்டோம் எள்ளளவும் ஏற்றமில்லை; வாட்டி வதைக்கின்றோம் வாழ்வைச் சுரண்டுகின்றோம்;150 சாத்திரத்தின் பேர்சொல்லித் தாழ்த்திவிட்ட மக்களுக்கு ஆத்திரங்கள் தோன்றாமுன் அன்போ டவர்தமக்குக் கொட்டு முழக்கோடு கோவிற் கதவெல்லாம் தட்டித் திறந்துவிட்டோம் சாதி தொலைத்தோமா? தீண்டாமை வேண்டுமெனச் செப்பித் திரிகின்ற வேண்டாத *பூரிகளும் மேலோங்கிப் பேசுகின்றார்; தேர்தலிலே சாதி தெளியத் தெரியவைத்தோம் ஊர்முழுதும் வேர்பலவாய் ஊன்றிக் கிளைக்கவிட்டோம்; சாதிக்கு நன்மதிப்பு சற்றே குறைந்தாலும் வீதிக்குள் வீட்டுக்குள் வீறு குறையவில்லை;160 எல்லாரும் ஓரினமென் றெண்ணி நடக்கவெனச் சொல்லாத ஏடில்லை, சொல்லாத் தலைவரிலை! இன்னும் மதவெறியை எள்ளவும் போக்கவிலை என்னும் படியிங்கே எங்கும் மதச்சண்டை; |